top of page

வெள்ளி, மார்ச் 21 || எரிகோவைத் தகர்க்காமல் திரும்பாதீர்கள்!


எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது... - யோசுவா 6:1



இஸ்ரவேலர் எரிகோவுக்கு அருகில் வந்தபோது, அது அவர்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. யாரும் அதனூடாகச் செல்ல வழியில்லை. ஆனால், இஸ்ரவேலர் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தபடியால் தகர்க்க முடியாது என அவர்கள் நினைத்த கோட்டை நொடிப்பொழுதில் தவிடுபொடியாகி விழுந்தது. ஆனால் அதற்கு முன்பாக, கர்த்தர் முதலாவதாக, யோசுவாவிடம் அவனது கால்களில் இருந்த பாதரட்சையைக் கழற்றும்படி சொன்னார். இது பழைய பாவசுபாவத்தைக் களைந்துவிட்டு தேவனுடைய பரிசுத்தத்திற்கு மாறுவதற்கு ஒப்பாக இருக்கிறது. எபிரெயர் 12:14, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே என்று கூறுகிறதல்லவா!

இரண்டாவதாக, யோசுவா தமது வார்த்தையை விசுவாசிக்கிறவனாக இருக்கவேண்டும் என கர்த்தர் விரும்பினார். யோசுவாவிடம், எரிகோவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்லாமல் ஒப்புக்கொடுத்தேன் என்று அவர் கூறியதை நாம் கவனிக்கவேண்டும். ஆம்! இஸ்ரவேலர் செய்யவேண்டியதெல்லாம் ஏற்கனவே பெற்றுவிட்ட அந்த வெற்றியைச் சுதந்தரித்துக்கொள்வது மாத்திரமே! மூன்றாவதாக, அவர்கள் பட்டணத்தை ஒருமுறையல்ல, ஏழுமுறை சுற்றிவரவேண்டும் என்றும், நான்காவதாக, அவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்யும்படியும் கர்த்தர் சொன்னார்; அப்படியே அவர்கள் செய்தபோதுதான் கோட்டை அவர்களின் கண்களுக்கு முன்பாகவே இடிந்துவிழுந்தது. அதாவது, சோர்ந்துபோய், முயற்சியைக் கைவிடாமல் முன்னேறி வெற்றியைச் சுதந்தரித்துக்கொள்ள அவர் கட்டளையிட்டார். நாமும் இந்த நான்கு காரியங்களைச் செய்வோமானால் நமக்கும் வெற்றி நிச்சயம். 
ஜெபம்: தேவனே, எனக்கெதிராக நிற்கும் மலைகளையும், தடுப்புச்சுவர்களையும் கண்டு நான் மலைத்து நின்றுவிடாமல், என்னை முதலாவது பரிசோதித்து பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, விசுவாசத்துடன் முன்னேறி, உம் சொற்படி நடந்து நீர் வாக்குப்பண்ணின வெற்றியைச் சுதந்தரிக்கக் கிருபை தாரும். ஆமென்.
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page